|
Saturday, March 24, 2012
கேணல் “சித்தார்த்தன்”
மட்டக்களப்பபு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது.
படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் கடுமையான விதிமுறைகளுக்கும், விசித்திரமான தண்டனைகளுக்கும் பெயர் பெற்றது. அதேவேளை ஆற்றல் விருத்திக்கு அது அடித்தளமாகவும் இருந்தது.
“பாவம் நல்லா மாட்டுப்பட்டுத்துகள், எப்படித்தான் நிண்டு பிடிக்கப்போகுதுகளோ” மூத்தபோராளி ஒருவன் பரிதாபப்பட்டான். “ஏன் அண்ண, உயிரையும் கொடுப்பம் எண்டுதானே போராட வந்தனாங்க, நிட்சயம் எதுக்கும் நிண்டுபிடிப்பம்.” மிக அமைதியான சுபாவம் கொண்ட அந்தப் புதிய போராளியிடமிருந்து வந்த நம்பிக்கையும், உறுதியுமிக்க வார்த்தைகள் எம்மை ஆச்சரியப்பட வைத்தன.
“தம்பி உங்கட பேரென்ன?”
“சித்தார்த்தன்”
ஆம். அவனிடம் தொனித்த அந்த நம்பிக்கை, உறுதி அவன் போராளியாக வாழ்ந்த காலம் முழுவதும் அவனிடம் நிறைந்தே இருந்தது... இன்னும் வலிமையாய்....
* * * * * * * * * * * * * * * * * * * * * *
மட்டக்களப்பில் 1992இல் தனது தொடக்கப்பயிற்சியை நிறைவுசெய்த “சித்தா” (நாங்கள் அவனை அப்படித்தான் அழைப்போம்) படைத்துறைப் பயிற்சிப் பிரிவில் இணைக்கப்படுகின்றான்.
இந்தப் பிரிவில் நின்றுபிடிப்பது கஸ்டம் என்று கூறப்பட்ட அந்த நாட்களில் அவன் இங்கு தன்னை மிக விரைவாக தகவமைத்துக் கொண்டான். தொடர்ச்சியான பயிற்சிகள், மிகக் கடினமான வேலைகள், புதிரான பாடங்கள், எதிரியின் தாக்குதல்கள், எமது வலிந்த தாக்குதல் முன்னெடுப்புகள் என்றிருந்த அந்த நாட்களில், சராசரிக்கு மேற்பட்ட ஒரு போராளியாக அவன் இனங்காணப்பட்டான்.
மிக அமைதியான சுபாவமும், உதவும் பண்பும், கடினமான வேலைகளைக்கூட தானாக விரும்பி ஏற்றுச் செய்யும் பக்குவமும், அவனது செயற்திறணும் போராளிகள் மத்தியில் அவனுக்கென்றொரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.
* * * * * * * * * * * * * * * * * * * * * *
பூநகரி கூட்டுப்படை முகாம் மீதான “தவளை” நடவடிக்கையே வடதமிழீழத்தின் அவனது முதற் களமாக அமைந்தது. சமர் முடிந்த கையோடு எழுதுமட்டுவாள் பகுதியில் பயிற்சி ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிகள் தொடங்கப்பட்டன. இப் பயிற்சிக் காலத்தில் பயிற்றுவித்த ஆசிரியர்களே பெருமைப்படக்கூடிய அளவிற்கு அவனது செயற்பாடுகள் அமைந்திருந்தன.
அதேபோன்று, அவன் பயிற்சி வழங்கத் தொடங்கியபோது, வழமையான “பயிற்சி ஆசிரியர்கள்” என்ற தோற்றப்பாட்டிற்கு அப்பால் ஒரு வேறுபாடான பயிற்சி ஆசிரியராக அவன் இனங்காணப்பட்டான். செயற்திறண், முன்மாதிரி, அணுகுமுறை என்பவற்றால் “சித்தா மாஸ்ரர்” என்ற பெயர் போராளிகளின் மனங்களில் நிலைபெற்ற ஒன்றாக மாறிவிட்டிருந்தது.
படைத்துறை தொடர்பிலான தொழிநுட்பக் கற்கைநெறி ஒன்றினைப் நிறைவு செய்து தென்தமிழீழம் திரும்பத் தயாரான வேளை சிறிலங்காப் படையினரால் “முன்னேறிப்பாய்தல்” நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிராக எம்மால் முன்னெடுக்கப்பட்ட “புலிப்பாய்ச்சல்” உட்பட்ட தாக்குதல்களில் பங்கு கொண்டான். இவற்றைத் தொடர்ந்து கொக்குளாய் இராணுவமுகாம் தாக்குதலிலும் பங்கெடுத்தான். அவன் சார்ந்திருந்த ஜெயந்தன் படையணி மீண்டும் தென்தமிழீழம் திரும்பியபோது சித்தாவும் புறப்பட்டான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * *
பயிற்சி ஆசிரியர் பிரிவில் 1992 இல் இணைந்து கொண்டவன் மிக விரைவிலேயே அப்பிரிவின் பொறுப்பாளராக உயர்ந்தான். இக் காலகட்டத்தில் மட்டக்களப்புப் பகுதியில் இடம்பெற்ற பல தாக்குதல்களில் பங்கு கொண்டான். 1993இல் ஜெயந்தியாய இராணுவ முகாம் தாக்குதலுடன் தொடங்கிய இவனது சமர்க்களப் பட்டறிவு, மாவடிவேம்பு படை முகாம் , கிண்ணையடி படை முகாம், குடாப்பொக்கணை காவல்துறை நிலையம், புளுகுணாவ சிறப்பு அதிரடிப்படை முகாம், மாவடிவேம்பு படை முகாம், கறப்பள படை முகாம், வவுணதீவு படை முகாம் என விரிந்ததுடன் எம்மால் நடாத்தப்பட்ட பல்வேறு பதுங்கித் தாக்குதல்களும் முற்றுகை முறியடிப்புகளும் அப்பட்டறிவிற்கு மேலும் வலுச்சேர்த்தன.
* * * * * * * * * * * * * * * * * * * * * *
யாழ்.குடாநாட்டிற்கு பாதை திறக்கவென சிறிலங்காப் படைத்தரப்பு முன்னெடுத்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை தொடங்கப்பட்டபோது மீண்டும் தென்தமிழீழப் படையணிகள் வன்னி நோக்கி விரைந்தன. எதிர்கொள்ளப் போகும் சமரின் பரிமாணத்தைக் கருத்தில் கொண்டு ஜெயந்தன் படையணி மீள் ஒழுங்கு செய்யப்பட்டது.
இதன்போது ஆற்றல் மிக்க அணித்தலைவர்களின் தேவையும் உணரப்பட்டது. இவ் அடிப்படையில் ஒரு கொம்பனி கொமாண்டராக சித்தா நியமனம் பெற்றான். அந்நாட்களில் கொம்பனி கொமாண்டராக, கொம்பனி மேலாளராக, குறித்ததொரு வேளையில் படையணியின் தாக்குதற் தளபதி என, பொறுப்பேற்று களங்களில் அணிகளை வழிநடத்தினான்.
* * * * * * * * * * * * * * * * * * * * * *
“ஜெயசிக்குறு” எதிர்ச் சமர்முனையின் மாங்குளப் பகுதி, முன்னணிக் காவலரண் பகுதியில் அவனை சந்திக்கிறோம். கையில் ஏற்பட்ட விழுப்புண் முற்றாக மாறாத நிலையில் அவன் இயல்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தான். “என்ன சித்தா வழமைபோல காயம் மாறமுதல் வந்தாச்சி போல.... இது எத்தனையாவது....” சித்தாவிடமிருந்து அந்த வழமையான புன்னகையே பதிலாகக் கிடைத்தது.
“முதல் மூண்டு... ஜெயசிக்குறுவில நாலு.... மொத்தம் ஏழு” அருகில் நின்ற போராளி அழுத்தமாய் கூறுகின்றான்.
ஓ... இவன் என்ன மாதிரியான மனிதன். ஏற்கனவே மூன்றுமுறை, அதில் கறப்பளையில் மார்பை ஊடறுத்த ரவை அவனை சாவின் வாசலுக்கே கொண்டுசென்றது. தாண்டிக்குளத்தில் காயமடைந்து அது மாறமுன்பே களம் வந்தான், மீண்டும் பெரியமடுவில்... அது மாறுமுன் மீண்டும் களம், அடுத்தது ஓமந்தையில்... குணமாகும் முன் மாங்குளம் வந்தான், மாங்குளத்திலும் அவனைத்தேடி ரவை வந்தது. இதோ இப்போது கைக்காயத்துடன் முன்னணியில்....
* * * * * * * * * * * * * * * * * * * * * *
ஓயாத அலைகள் - 2. கிளிநொச்சி பிரிகேட் தளத்தைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல்கள் தொடங்கின. இத் தாக்குதல்களில் ஜெயந்தன் படையணியின் கொம்பனிகள் வெவ்வேறு முனைகளில் சண்டையிட வேண்டியிருந்தது. சித்தாவின் அணிக்கு கிளிநொச்சி குளப்பகுதி முன்னணி அரண் வரிசையைக் கைப்பற்றி குறித்த இலக்கு நோக்கி தாக்குதல் தொடுக்கும் பணி வழங்கப்பட்டிருந்தது. நீர் நிறைந்திருந்த குளத்தின் ஊடாக மிக இரகசியமாக நகரவேண்டியிருந்தது. நகர்வை மிகச் சிறப்பாகச் செய்த அவ்வணி குள பண்டை கடந்து கொண்டிருந்தபோது அங்கு சண்டை மூண்டது.
சாதகமற்றதொரு சூழ்நிலையில், தரையமைப்பில் சண்டை தொடங்கி விட்டது. உக்கிரமான தாக்குதல், அந்த அணியின் வீரர்கள் அதன் தலைவனைப்போல் உறுதியானவர்கள், இறுதிவரை போராடக்கூடியவர்கள்.....
அடுத்த நாள் கிளிநொச்சி பிரிகேட் தளம் அழிக்கப்பட்டு, கிளிநொச்சி நகர் மீட்பு வெற்றிச் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றது....
* * * * * * * * * * * * * * * * * * * * * *
குறித்ததொரு பயிற்சித் திட்டம் தொடர்பாகக் கதைப்பதற்காக தேசியத் தலைவரால் அழைக்கப்பட்டிருந்தோம். மூத்த தளபதிகள் சிலருடன் தேசியத் தலைவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது எல்லைப்படை வீரர்களுக்கான பயிற்சிப் பாசறைக்கு பொருத்தமான பெயர் சூட்ட வேண்டும் என மூத்த தளபதி ஒருவர் கோரிக்கை வைக்கிறார். பலரும் பல்வேறு பெயர்களை முன்மொழிகின்றனர். தேசியத் தலைவரின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.... “சித்தா பயிற்சிப் பாசறை என்று பெயர் வையுங்கோ.”
“லெப்.கேணல் சித்தா ஒரு அமைதியான சுபாவம் கொண்ட ஆற்றல் மிக்க லீடர், ஒரு நல்ல பயிற்சி ஆசிரியர், களத்தில் பலதடவை காயப்பட்டவர், கடைசிச் சண்டையில்கூட மிக உறுதியாகச் செயற்பட்டவர்....” என சித்தா மாஸ்ரரைப் பற்றி தேசியத் தலைவர் கூறிக்கொண்டு போக எமக்கு ஆச்சரியமாகவும், அதேவேளை மிகப் பெருமையாகவும் இருந்தது. ஒரு உண்மை வீரனுக்குக் கிடைக்கக்கூடிய அதியுயர் மதிப்பு இதைத்தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?.
எமது போராட்ட வரலாற்றில் ஒரே களத்தில் நான்குமுறை விழுப்புண் ஏற்று ஒவ்வொரு விழுப்புண்ணும் மாறும் முன்பே களம் வந்து படைநடத்திய வீரன் அவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். அந்தப் பெரும் சமர்க்களத்தில் அவன் ஐந்தாவது முறையாகவும் காயப்பட்டான். மீண்டும் அவன் களம் வரவில்லை, வரவேயில்லை.
சித்தா....அமைதியான ஆழுமை. ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல்.
கேணல் வீரமணி
|
கேணல் ரமணன் -கந்தையா உலகநாதன்
பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக்கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பள்ளி, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர.
படுவான்கரையை முன்னேற்றுவதற்கு ஓயாது உழைத்து அந்தப் பாடசாலை உருவாவதற்கு அடித்தளமிட்ட கண்டுமணி ஐயாவின் பெயரே அந்தப் பாடசாலைக்கும் இடப்பட்டதில் ஊரில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியே. இப்போது அது கிழக்குப் புறமாக தாராளமான அளவில் ஒரு விளையாட்டுத்திடலும் இரண்டு மாடிக் கட்டிடங்களும் ஆய்வு கூடமும் அந்தப் பகுதியின் கொத்தணிப் பாடசாலை என்ற களையோடு இருந்தது. பழுகாமத்தில் இன்றிருக்கும் பெரியவர்களில் பலர் கற்றுத் தேர்ந்ததும் சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் உழைத்த பலருக்கு எழுத்தறிவித்ததும் அதன் மேல் எழுதப்படாத பெருமைகள்.
அவற்றோடு சேர்த்து தாயக மீட்புப் போரிலும் பங்கேற்கப்போகும் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தப் பள்ளியை ஒரு உழுவூர்தி நெருங்கிக் கொண்டிருப்பதற்கான இரைச்சல் இப்போது கேட்கிறது. மதிலின் பின்னால் பதுங்கியிருக்கும் உருவங்கள் அசையாவிட்டாலும் ஒரு பரபரப்பிற்கு உள்ளாகின்றன. ஒரேயொரு உருவம் மட்டும் மெதுவாக தலையை நீட்டி நெருங்கும் உழுவூர்தியை உற்றுப் பார்க்கிறது. அதன் முகத்தில் நிறைவு தெரிய தலையை உள்ளே இழுத்த பின் பின்புறத்தில் பதுங்கிக்கொண்டிருந்த உருவங்களுக்கான சைகைகள் கிடைக்கின்றன. இப்போது மறைந்திருந்த
உருவங்களின் கைகளில் ஆயுதங்கள் தெரிகின்றன. பெரும்பாலானவை கைக் குண்டுகள். தாக்குதல் ரைபிள்கள் இரண்டு.
உழுவூர்தியின் பெரிய சில்லுக்களின் மீதான சுரிக்காப்புத் தகடுகளிலும் பெட்டியிலுமாக வந்துகொண்டிருந்த ஆட்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள். சிலர் இயல்பான பொது உடையில் இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள். அருகிலிருந்த முகாமிலிருந்து மனித வேட்டைக்காகக் கிளம்பி வந்துகொண்டிருந்த அவர்கள் முதல் நாளும் அதேபோல வந்து மனித வேட்டையை நடத்தியிருந்தார்கள். அவர்களின் வேட்டையில் குருத்துக்கள் முறிக்கப்பட்டன. எல்லா வயதுப் பெண்களும் சூறையாடப்பட்டார்கள். வயல் வாடிகளுக்குள்ளே உயிருடன் குடும்பங்கள் எரிக்கப்பட்டன. ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான ஓய்வில்லாத ஒட்டமாக இருந்தது. பிய்த்தெறியப்பட்ட குடும்பங்கள் காடுகளிலும் வெளியூர்களிலுமாக கொடிய குற்றவாளிகளைப் போல ஒளித்தோடிக கொண்டிருந்தார்கள். மனித வேட்யைக்காரர்கள் தகப்பனுக்காக மகனையும் தமையனுக்காக தங்கையையும் குதறிக் கொண்டிருந்தார்கள். அவ்வகையான வெறியாட்டத்திற்காக வந்துகொண்டிருந்த அந்தக் கும்பல் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தை நெருங்கியபோது திடீரெனத் தோன்றிய ஒரு உருவம் கையிலிருந்த ரைபிளால் சரமாரியாகச் சுடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உழுவூர்தியைச் சுற்றிலும் தோன்றிய உருவங்கள் கைக்குண்டுகளாலும் ரைபிளாலும் தாக்கத் தொடங்க திருப்பிச் சுடும் திராணியற்றுச் செத்து விழுந்தது மனிதவேட்டைக் கும்பல.
தலை தெறிக்கத் தப்பி ஓடியோர்போக விழுந்துகிடந்தவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டன. தாக்கிய உருவங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கிய பின் வெடிப்புகையும் இரத்தமுமாகக் கிடந்த சாலையில் விழுந்துகிடந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் துரோகிகளையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு விடுபட்டுக் கிடந்த மேலுமொரு ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய கடைசி உருவம், ரமணன்.
அந்தச் சண்டையின் வேவு நடவடிக்கையைத் திட்டமிட்டதிலிருந்து கடைசியாக நின்று போராளிகளைப் பாதுகாப்பாக மறைவிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது வரை தலைமை தாங்கி நடத்திய ரமணனின் அகவை அப்போது 21. பயிற்சி பெற்று ஒரு ஆண்டு தான் ஆகியிருந்தது.
கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயருடன் பழுகாமத்தில் பிறந்து கண்டுமணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று 86ம் ஆண்டின் முற்பகுதியில் போராட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு 3ம் பாசறையில் பயிற்சி முடித்த ரமணனின் குடும்பம் விடுதலைக்காகச் செலுத்திய விலை சாதாரணமானதல்ல. ரமணன் இயக்கத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவரின் அண்ணனும் இணைந்து விடுகிறார். இன்னுமோர் அண்ணன் (கந்தையா மோகனதாஸ்) ஆரம்பத்தில் பிறிதொரு அமைப்பில் தனது விடுதலைப் பணியை ஆரம்பித்திருந்தாலும், தேசியத் தலைவரின் மகத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த போது இந்தியப் படையாலும் துரோகிகளாலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர். அடுத்த தங்கையும் போராளியாக பல ஆண்டுகளை நிறைவு செய்தவர். இன்னுமொரு சகோதரர் போராளியாகவிருந்து தமிழீழக் காவற்றுறையில் பணியாற்றுபவர்.
போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை வருடிக்கொடுக்கும் அவரின் தாயார் எதிர்கொண்ட துயரங்களும் கொஞ்சமல்ல. அடிக்கடி தேடிவரும் படைகளுக்கும் தொடரும் துரோகிகளுக்கும் ஈடுகொடுப்பதிலேயே அந்தத் தாயின் வாழ்கை கழிந்துகொண்டிருந்தது. அவ்வாறான ஒரு சம்பவத்தில் ஆத்திரமுற்ற எதிரிகள் அவரின் வீட்டைக் குண்டு வைத்துத் தரைமட்டமாகத் தகர்த்து விடுகிறார்கள். அவரின் தங்கை வீட்டில் தஞ்சமடைய, அந்த வீடும் தாக்குதலுக்கு உள்ளாகிறது.
இவ்வாறான சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையினுள்ளும் எதிரி மீதான தனது தாக்குதல்களில் சற்றும் தளர்வைக் காட்டி யவரல்ல ரமணன். தனது வீட்டை எதிரிகள் நெருங்குவதை அறிந்து அங்கே வைக்கப் பட்டிருந்த மரங்களுக்குக் கீழே பொறி குண்டை அமைத்துவிட்டு விலகிச் செல்ல அங்கேவந்து அடாவடி செய்த படையினர் இருவர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். தேசியத் தலைவரின் கெரில்லாத் தந்திரோபாயங்களுக்கு மிகச் சிறந்த முறையில் களநிலை வடிவம் தந்தவர்களில் ரமணனும் ஒருவர். எந்தப் பொருள் எப்போது வெடிக்கும் எங்கிருந்து சன்னங்கள் கிளம்பும் என்று இரவும் பகலும் எதிரியை ஏங்கவைத்த பெருமை ரமணனுக்கே உண்டு.
நியுட்டன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்தபோது தனது புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் துவக்கிய ரமணன், துரோகி ஒழிப்பிலும் ஊடுருவல் களை முறியடிப்பதிலும் தனது தனித்துவ முத்திரையை பதித்திருக்கிறார். ரமணனைக் கொல்வதற்கான பல சதிகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதும் அத்திட்டங்கள் அனைத்துமே ரமணனின் நுட்பமான தகவற் கட்டமைப் பால் முறியடிக்கப்பட்டன. அவரின் தந்தி ரோபயச் செயற்பாடுகள் தாயகத்திற்கு வெளியிலும் நீண்டிருந்தன. ரமணனின் புலனாய்வுப் பேறுகளைப் பட்டியலிடுவது சிரமம். “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன். தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில் பணியாற்ற வேண்டியதாயிற்று,” என்கிறார் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு.
கேணல் ரமணனின் போராட்ட வாழ்வின் தொடக்க நாட்களில் இருந்தே அவரோடு நெருக்கமாகப் பழகியவரும் பல சமர்க்களங்களை அவரோடு பகிர்ந்துகொண்டவருமான கேணல் ரமேஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, “ஒரு சமரிலே ரமணனின் சம்பந்தம் இருப்பதைப் போராளிகள் அறியும்போது அவர்களுக்கு நம்பிக்கையும் சிறிலங்கா படையினர் அறியும் போது அவர்களுக்குப் பயமும் ஏற்படு வதுண்டு. அந்தளவிற்கு ரமணனின் திட்ட மிடல்கள் புகழ்பெற்றவையாக இருந்தன.” என்றார். படைத்துறைச் செயற்பாடுகளைப் புலனாய்வுத் தன்மையோடு நகர்த்துவது ரமணனின் தனித்துவம்.
2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம். துரோகி கருணா எமது மாவீரர்களை அவமதிக்கும் வகையில் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நீசத்தனத்தில் இறங்கியபோது கொதித்தெழுந்த உள்ளங்களில் ரமணன் முக்கியமானவர். அவமானத்தில் இருந்தும் அழிவிலிருந்தும் எமது மக்களையும் போராளிகளையும் காப்பாற்றும் பணியில் மிகப் பழுவான பணியொன்றை விரும்பி ஏற்கிறார் ரமணன். மிகச் சில போராளிகளுடன் மட்டக்களப்புப் பகுதியைப் பின்புறமாக அண்மித்து உள் நுளைகிறார். ரமணன் வந்துவிட்ட செய்தி விடுதலையை விரும்பிய மக்களுக்குத் தேனாக, துரோகி கருணாவிற்கோ இடியாகக் கேட்கிறது. ஏற்கனவே வாகரையை இழந்துவிட்ட கருணா இப்போது மாவடி முன்மாரியையும் இழந்து கொண்டிருப்பதைக் காண்கிறான். இந்த நேரத்தில் ரமணன் தொடுத்த தந்திரோபாயத் தாக்குதலால் நிலை குலைந்துபோய் தனது கையாட்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கருணா தப்பியோட முயற்சிக்கிறான். முதல் அணியாக குடும்பிமலைப் பிரதேசத்திற்குள் நுழைந்து கருணாவினால் கடைசி நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட நீலனின் வித்துடலை மீட்ட அணி ரமணனுடையது.
அதன் பின்னர் சிறிலங்கா படைப் புலனாய்வினரும் ஒட்டுக்குழுக்களும் செய்த பெரும்பாலான சதிகளை முறியடித்து மாவடி முன்மாரிப் கோட்டத்தின் காவலனாகவும் மட்டக்களப்பின் துணைத் தளபதியாகவும் இருந்த கேணல் ரமணன் வவுணதீவிலுள்ள போராளிகளின் காவலரண் களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது எதிரியின் சதிச் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவடைகிறார்.
மண்ணின் மணத்தோடும் அதற்கேயுரிய இயல்புகளோடும் சீற்றத்தோடும் வளர்ந்த ரமணன் அந்த மண்ணின் தனிச் சிறப்பான கலைகளிலும் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்கியவர். பூநகரித் தகர்ப்பின் பின் எழுதுமட்டுவாள் ஜெயந்தன் முகாமில் அவர் எலும்புக்கூட்டு உடையணிந்து நடனமாடியதைப் பார்த்தவர்கள் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள். தளங்களில் நடக்கும் கலை நிகழ்வுகளில் பாடியதோடு மட்டுமல்லாது தான் கற்றதும், எதிரியை மறைந்திருந்து சுட்டதுமான பள்ளியின் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற ஈகைச்சுடர் திலீபன் நினைவு நிகழ்வின்போது தனது உற்றவரும் பெற்றவரும் பார்த்திருக்க தலைவனைப் பற்றிய பாடலைப் பாடியதும் அனைவரது கண் முன்னும் அகலாது நிற்கும். கலைகளோடு மட்டுமல்லாது விளையாட்டுக்களிலும் நேரே பங்கெடுத்து போராளிகளுடன் விளையாடி தளத்தை உற்சாகமாக வைத்திருந்த நாட்களும் பதிவுகளுக்குரியவை.
சுனாமியின் பின்னான நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் மக்களின் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டபோது, எதிரியால் இலக்குவைக்கப்பட்டிருப்பது தெரிந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் மக்களோடு நின்றதும் நினைவழியா நிகழ்வுகள். பன்சேனைக் கிராமத்தில் திலீபன் மருத்துவமனையைக் கட்டுவதற்கான அவரின் காத்திரமான பங்களிப்பு அந்தக் கட்டிடத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பொழுதிலும் கண்முன் ஆடும். பழுகாமமும் அதற்குத் தலைப்பாகை கட்டி நிற்கும் ஒட்டிச் சதுப்பு நிலமும் ரமணனுடைய நினைவுகளைத் தன் ஆழங்களில் தாங்கி நிற்கின்றன. கண்ணாக் காடுகளின் சலசலப்பிலும் கொக்குப் பீச்சல் திடலில் ஓய்வு கொள்ளும் பறவையினங்களின் பாட்டிலும் ரமணனின் பெயர் நிச்சயம் சொல்லப்படும். தாயகப் பயணப் பாதையில் விழுமுன்னமே முளை விட்ட விருட்சமாகத் தனது தனித்துவமான போர் உத்திகளைத் தந்து சென்ற ரமணன் என்றும் அந்த உத்திகளின் வடிவத்திலும் நினைவுகளின் ஆழத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
35வது புத்தகக் கண்காட்சி
சென்னை புத்தக கண்காட்சியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான நூல்கள் இடம்பெற்றிருந்தன - தேசியத்தலைவரது நாட்காட்டி அமோக விற்பனை.
சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 35வது புத்தகக் கண்காட்சியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய நூல்களும் அதிகளவில் இடம்பிடித்துள்ளன.
குறிப்பாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நாட்காட்டி அமோக விற்பனையாகி வருவதை காணக்கூடியதாக உள்ளது.
நடைபெற்றுவரும் 35வது புத்தகக் கண்காட்சி 05ம் திகதி முதல் சென்னை பச்சயப்பா கல்லூரி எதிரில் உள்ள கல்லூரி மைதாணத்தில் நடைபெற்றுவருகின்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டதுடன் பல்வேறு நூல்களையும் வாங்கிச் சென்றனர்.
நடைபெற்றுவரும் 35வது புத்தகக் கண்காட்சி 05ம் திகதி முதல் சென்னை பச்சயப்பா கல்லூரி எதிரில் உள்ள கல்லூரி மைதாணத்தில் நடைபெற்றுவருகின்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டதுடன் பல்வேறு நூல்களையும் வாங்கிச் சென்றனர்.
இந்தமுறை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பதிப்பகங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான நூல்கள் விற்பைனைக்கு வைக்கப்பட்டிருந்ததையும் அதனை பல மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதையும் கண்கூடாக காணக்கூடியதாக இருந்தது.
தமிழீழத் தேசியத் தலைவர் குறித்த பல்வேறு புத்தகங்களும் இடம்பெற்றிருந்தன. உலகளாவிய பிரபலமானவர்களின் தலைவர் குறித்த கருத்துக்களை தொகுத்து தோழமை வெளியீட்டினால் வெளியிடப்பட்ட இவன் ஒரு வரலாறு என்ற நூலும் தமிழீழத் தேசியத் தலைவரது மாவீரர் நாள் உரைத் தொகுப்பு நூலும் தலைவரது சிந்தனைகள் அடங்கிய நூலும் தலைவர் தொடர்பாக தமிழக எழுத்தாளர்களால் எழுதப்பட்ட இன்னும் பல நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
தமிழீழ ஆதரவாளரும் இந்திய கம்யூனிட்டு கட்சியின் மாநிலத் துணைத்தலைவருமான சி.மகேந்திரன் அவர்கள் ஆனந்தவிகடன் வாரஇதழில் தொடராக எழுதிவந்த முள்ளிவாய்க்கால் துயரங்கள் "வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டிருந்தது. கடந்த 13ம் திகதி இந்நூல் வெளியீட்டு நிகழ்வு இதே புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்றிருந்தது.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது முழு உருவப்படம் தாங்கிய நாட்காட்டி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது முதல் பெருமளவில் மக்களால் வாங்கிச் செல்லப்பட்டதாக விற்பனையில் ஈடுபட்டிருந்தவர் தெரிவித்திருந்தார். புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த பலர் தலைவரின் நாட்காட்டியை தொகை தொகையாக வாங்கிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் வெளியீடான தமிழ் மண் பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கும் பழ.நெடுமாறன் அய்யா எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற வரலாற்று நூலின் விளம்பரம் மக்களை கவர்ந்திருந்தது.
இந்த நூலின் மாதிரி வடிவம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவச் சீருடையில் தலைவர் பிரபாகரன் அவர்கள் கம்பீரமாக நிற்கும் படத்தினை தாங்கிய அட்டைப்படத்துடன் கூடிய இந்த நூலின் மாதிரியை பார்க்கும் போது தலைவரே நேராக வந்து நிற்பது போன்று இருந்தது.
தமிழீழ ஆதரவாளரும் இந்திய கம்யூனிட்டு கட்சியின் மாநிலத் துணைத்தலைவருமான சி.மகேந்திரன் அவர்கள் ஆனந்தவிகடன் வாரஇதழில் தொடராக எழுதிவந்த முள்ளிவாய்க்கால் துயரங்கள் "வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டிருந்தது. கடந்த 13ம் திகதி இந்நூல் வெளியீட்டு நிகழ்வு இதே புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்றிருந்தது.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது முழு உருவப்படம் தாங்கிய நாட்காட்டி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது முதல் பெருமளவில் மக்களால் வாங்கிச் செல்லப்பட்டதாக விற்பனையில் ஈடுபட்டிருந்தவர் தெரிவித்திருந்தார். புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த பலர் தலைவரின் நாட்காட்டியை தொகை தொகையாக வாங்கிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் வெளியீடான தமிழ் மண் பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கும் பழ.நெடுமாறன் அய்யா எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற வரலாற்று நூலின் விளம்பரம் மக்களை கவர்ந்திருந்தது.
இந்த நூலின் மாதிரி வடிவம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவச் சீருடையில் தலைவர் பிரபாகரன் அவர்கள் கம்பீரமாக நிற்கும் படத்தினை தாங்கிய அட்டைப்படத்துடன் கூடிய இந்த நூலின் மாதிரியை பார்க்கும் போது தலைவரே நேராக வந்து நிற்பது போன்று இருந்தது.
Subscribe to:
Posts (Atom)