Like me

Thursday, May 2, 2013

கூடங்குளம் அணுமின் நிலையம் நமக்கு தேவையா ?


  • கூடங்குளம் அணுமின் நிலையம் நமக்கு(தமிழனுக்கு) தேவையா ?

    இவ்வளவு நாட்கள் சும்மா இருந்துவிட்டு அணுவுலை செயல்பாட்டுக்கு வரும்போது இப்படிபட்ட போராட்டம் தேவையா?அதற்கென்று செலவழிக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்படலாமா?

                     
    அணுகதிர்வீச்சால் ஒரு சந்ததியினர் மட்டுமல்ல பின்வரும் அனைத்து சந்ததியினருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆங்கில தொலைக்காட்சியான பி.பி.சி-ஆல் செர்னோபில் விபத்திற்குப்பிறகு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று எடுக்கப்பட்டு தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட "செர்னோபில் இதயம்" என்ற ஆவணப்படமே சாட்சி. இத்தகைய பாதிப்புகள் நம் இனத்தவர்களுக்கு, நம் கண்முன்னே வாழ்பவர்களுக்கு நடந்துவிடகூடாது என போராடும் ஒருவனுக்கு இந்த அரசும் ஒரு சிலரும் வழங்கும் பெயர் "தேசத்துரோகி" என்றால் திரு.உதயகுமார் தேசத்துரோகியாகவே இருந்துவிட்டு போகட்டும்.

    செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டே கூடங்குளம் அணு உலைத்திட்டத்திற்கு கையெழுத்திட்டது ரஷ்யா. 1993ம் ஆண்டுக்கு பின் அமெரிக்கா அணுவுலைகள் எதுவும் அமைக்கவில்லை. ஜப்பான், ஃபுக்குசிமா அணு உலைகள் வெடித்து சிதறிய பின்னர் சுவிட்சர்லாந்து 2020க்குள்ளும், ஜெர்மனி 2022க்குள்ளும் எல்லா அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாக அறிவித்துள்ளன. ஊழலும், அலட்சியமும் குறைந்த அல்லது இவையிரண்டும் இல்லாத நாடுகளே விபத்து ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி தமது அணுவுலைகளை மூடிக்கொண்டிருக்கும்போது ஊழலும், அலட்சியமும் எங்கும் பரவிக்கிடக்கும் இந்தியா போன்ற தேசத்தில் விபத்தே ஏற்படாது என்று எந்தவகையில் மக்கள் நம்புவார்கள். உதாரணத்திற்கு "போப்பால்". இந்திய அரசு, "யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட்" என்ற நிறுவனம் பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளித்தப்பிறகுதான் 20 ஆயிரம் மக்களை காவுவாங்கிய போப்பால் பேரழிவு நடந்தது. செர்னோபில், ஃபுக்குசிமா அணுவுலைகளும் அமைக்கும்போது பாதுகாப்பானது என்றுதான் கூறப்பட்டது.

    இது கூடங்குளம், இடிந்தகரை மக்களை மட்டும் பாதிக்கும் பிரச்சனை இல்லை. கன்னியாகுமரி மாவட்டம் தாண்டி கேரளத்துக் கொல்லம் வரை இதன் பாதிப்புகள் இருக்கும். வெறும் 450 மெகாவாட் உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதியிலேயே புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் உள்ளன. அப்படியானால் 2000 மெகாவாட் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுவுலை இயக்கப்பட்டால் எவ்வளவு வீரியமிக்க கதிவீச்சு ஏற்படும் என்று சற்றே சிந்தியுங்கள். அணுவுலை இயங்கும் நிலையிலேயே இப்படி என்றால் விபத்து நேர்ந்து உலை வெடித்து சிதறினால் என்ன ஆகும்? "ஹிரோசிமா, நாகாசாகி, மற்றும் செர்னோபில், ஃபுக்குஷிமா" வரிசையில் கூடங்குளமும் இணையும் ஏன் தமிழமேகூட இணையலாம்.

    விபத்தே ஏற்படாமல் 40 ஆண்டுகள் ஓடி முடித்து விட்டாலும்கூட எஞ்சியுள்ள அணுக்கழிவுகளை 40 ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக பெருத்த பொருட்செலவில் பாதுகாக்க வேண்டும். மட்கா கழிவுகளான ப்ளாஸ்டிக்குகளையே வேண்டாம் என்று சொல்லும் மக்கள் அணுக்கழிவுகளை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்.

    இந்தியாவில் 97 சதவிகிதம் மின்சாரம் அணுவுலை தவிர்த்த மின்உற்பத்தி முறையிலேயே உருவாக்கப்படுகின்றது. மின்சார பற்றாக்குறையால் தமிழகம் தத்தளித்துக்கொண்டு இருக்கும் போது கடலுக்கடியில் மனிஇழை(கேபிள் வயர்) போட்டு இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் அவசியம் என்ன?


    "கூடங்குளம் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை அடியோடு ஒழிந்துவிடும், தமிழகம் மின்மிகை மாநிலம் ஆகிவிடும்" என்று கூப்பாடு போட்டு கனவு காண்பவர்கள் வெறும் 225மெகாவாட் மின்சாரத்தை வைத்துக்கொண்டு பெரிதாக ஒன்றும் சாதித்துவிடமுடியாது(அதாவது ஒரு மயிரையும் புடுங்கமுடியாது) என்பதை புரிந்து கொள்ளவும். இந்த 225மெகாவாட் மின்சாரத்தை ஏன் காற்றாலை மூலமாகவோ, அனல் மின்சக்தி மூலமாகவோ நீர்மின்சக்தி மூலமாகவோ சூரியமின்சக்தி மூலமாகவோ தயாரிக்க முடியாது?, குறைந்த செலவில் அதிக மின்உற்பத்தி செய்ய பல்வேறு வழிகள் இருந்தும், அதிக பொருட்செலவில் அதிக ஆபத்துக்களையும் குறைந்த மின்சாரத்தையும் தயரிக்கும் அணுவுலைகளைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

    அணுவுலைக்கு எதிரான போராட்டம் ஏதோ திடீர் என்று தோன்றியதல்ல, அப்படி கூறுபவர்கள் கொஞ்சம் வலைத்தளத்தில் ஆராய்ந்து பார்க்கவும், கூடங்குளம் திட்டம் கையெழுத்தானபோதே அதாவது 1988ம் ஆண்டு முதலே கூடங்குளம் பகுதியில் அணுவுலைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 1988ல் மக்கள் எதிர்ப்பினால்தான் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரும் பயணத்தை ரத்து செய்தார். 1989ல் அணுவுலைக்கு எதிராக போராடியவர்களை துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கியது.

    "அணுவுலையை உடனே திறக்கவேண்டும்!" என்றும் "தேசத்துரோகி உதயகுமாரை கைதுசெய்யவேண்டும்" என்றும் கோஷமிடுகிறார்களே ஒழிய "கூடங்குளம் அணுவுலையில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும்" என என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா???

    கூடங்குளம் பற்றி நாம் எவ்வளவு காலம் பேசுவோம் ? மின்வெட்டு பிரச்சனை தீரும்வரை அல்லது கூடங்குளத்தில் ஊடக வெளிச்சம் இருக்கும்வரை, அதன் பிறகு? வழக்கம்போல மறந்துவிடுவோம், மறதி நம் தேசிய வியாதி என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபிப்போம்.

No comments:

Post a Comment