Like me

Tuesday, April 3, 2012

ஜப்பானில் அணு உலை விபத்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்....

 


ஜப்பானில் அணு உலை விபத்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்....

தொலைதூர நாட்டில் ஓர் அணு விபத்து நடந்தால் அதனால் வெளியாகும் கதிர்வீச்சு நமது நாட்டை குறிப்பாகத் தமிழகத்தை வந்தடையுமா? அதன் காரணமாக சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்பதே முக்கியமான கேள்வி! மேலும் நமது நாட்டில் / தமிழகத்தில் முன் உதாரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? 1986ல் ரஷ்யாவில் செர்னோபில் விபத்து நடந்து பல கொடிய விளைவுகளை அந்நாட்டில் மட்டுமல்லாது, தொலைதூர நாடுகளிலும் கூட பாதிப்பை ஏற்படுத்தியது, மனதில் கொள்வது நல்லது. செர்னோபில் விபத்து நடந்து இரு வாரங்களுக்குப் பின் கல்பாக்க அணு விஞ்ஞானிகள் காற்றிலும், ஆட்டு தைராய்டிலும் அயோடின் 131 எனும் வாயுக்கழிவினை அளந்து பார்க்கையில் அது முந்தைய அளவைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அணுக்கதிர் வீச்சின் தாக்கம் 3 6 மாதம் வரை நீடித்தது என அரசு தரப்புச் செய்திகளே தெளிவாக உள்ளன. மேலும் மும்பையில் செர்னோபில் விபத்திற்குப் பின் மே மாதம் காற்றில், மணலில் சீசியம் 137 எனும் கதிர்வீச்சுத் தன்மையுள்ள வேதிப்பொருளை அளந்து பார்க்கையில் காற்றில் அது அதிகபட்சமாக 4 மி.லி பெக்கரேல் / மீ எனும் அளவிலும் மணலில் விபத்திற்கு முன் 37 பெக்கரேல் / மீ2 என்ற அளவிலும் விபத்திற்குப் பின் அது 72 பெக்கரேல் / மீ2 (இரு மடங்காக) இருந்தது அணுசக்தி விஞ்ஞானிகளின் ஆய்வின் முடிவில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. கல்பாக்கத்திலும், மும்பையிலும் அப்போதே இந்தக் கதிர்வீச்சின் காரணமாக சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டிருக்கின்றதா? என அறிய எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனையான விசயம். சென்னைக்கும், செர்னோபில்லுக்கும் இடையே உளள தூரம் ஏறக்குறைய 6200 கி.மீ. ஆகும்.

இப்போதும் ஜப்பான் அணு உலை விபத்திற்குப் பின் 8600/ கி.மீ. தொலைவிலுள்ள அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகரமான சேக்ரோமெண்டோ எனுமிடத்தில் கதிர்வீச்சு பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. உதாரணமாக அயோடின் 131ஐ எடுத்துக் கொண்டால் காற்றில் அதன் அளவு 165 மிலி பெக்கரேல் / மீ3 என இருந்தது. அதேபோன்று அமெரிக்கத் தலைநகரமான வாஷிங்டனில் கூட கதிர் வீச்சின் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கனடாவிலும், ஸ்காட்லாந்திலும், சைனாவிலும், தென்கொரியாவிலும் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவிலும் குடிநீரில் அயோடின் 131 அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட இருமடங்கு ஆக இருந்ததால் குழாய் மூலமாக பெறும் குடிநீரை யாரும் குடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜப்பானுக்கும் தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்கும் இடையே உள்ள தூரம் வெறும் 6600 கி.மீ. மட்டுமே! 8600 கி.மீ. தொலைவில் பாதிப்பு இருக்கும் போது 6600 கி.மீ. தொலைவிலுள்ள சென்னையில் அதன் பாதிப்பு தெரிய வாய்ப்பு இருக்கும்போது அறிவியல் ரீதியாக கதிர்வீச்சை அளந்து பார்த்து பாதிப்பில்லை எனக் கூறுவதற்குப் பதிலாக காற்றின் திசை, அமெரிக்க நாடுகளின் பக்கம் இருப்பதாக கூறி இங்கே முறையாக அளந்து பார்க்காமல் பாதிப்பு ஏதும் இந்திய மக்களுக்கு வராது எனக் கூறுவது அறிவியல்தானா?

ஜப்பானிய அரசு குடிநீரிலும் உணவுப் பொருட்களிலும் கதிர்வீச்சின் பாதிப்பு இருப்பதை ஒப்புக் கொண்டாலும் அதன் அளவு குறைவாக இருப்பதால் சுகாதார சீர்கேடுகள் வராது எனக்கூறுவது சரிதானா? உணவுப் பொருட்களால் கதிர்வீச்சு பாதிப்பு ஏதும் வராது என இருந்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நகரங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்கா ஏன் தடை விதிக்க வேண்டும்?

இந்தியாவில் ஏன் ஜப்பானிலிருந்து வரும் உணவுப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை? டோக்கியோவிலுள்ள குடிநீர் அயோடின் 131ன் பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது எனக் கூறினாலும். பின்னர் ஏன் குழாய் வழியான குடிநீரை குடிக்க கூடாது என சொல்ல வேண்டும்? ஆக கதிர்வீச்சு பாதிப்பு என்பது கண்டம்தாண்டி, (இந்திய சுகாதாரத்துறை கதிர்வீச்சின் அச்சம் காரணமாக ஜப்பானிலிருந்து வரும் உணவுப் பொருட்களுக்கு 3 மாதம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது) நாடுதாண்டி, பாதிப்பை ஏற்படுத்த முடியும் என இருந்தும் இந்தியாவில் / தமிழ்நாட்டில் முறையான அறிவியல் ஆய்வுகள் நடத்தப்படாதது எதனால்?

ஜப்பான் அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் எனப் புரிந்து கொள்வதற்கு முன் கதிர்வீச்சு மனித உடம்பில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தான சில அடிப்படை கருத்துகளை தெரிந்து கொள்வது நல்லது! அவை

1. கதிர்வீச்சைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு என ஒன்று இல்லவே இல்லை என்பதுதான் அணுசக்தி குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளும் உலகளாவிய அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

2. 2005ஆம் ஆண்டு ஜனவரியில் X கதிர்கள், காமா கதிர்கள், நியூட்ரான்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என அதிகாரப்பூர்வமாக அறிவியல் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

3. Xரே எடுப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு ஒரு அணுகுண்டு போட்டால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பை விட அதிகம் என்பதே வியக்கத்தகு அறிவியல் உண்மையாகும். இதற்கான காரணத்தை இப்போது சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம். உடம்பில் செல் ஒன்றில் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருப்பது கண்ணுக்குப் புலப்படாத மிகச்சிறு அளவில் மூலக்கூற்றில் (DNA) இரு இடங்களில் ஏற்படும் மாற்றமே! அணுகுண்டினால் ஏற்படும் பெரும் கதிர்வீச்சு உடலில் (செல்களில்) பெரும்பாதிப்புகளை ஏற்படுத்துவதால் உடம்பால் அது உணரப்பட்டு அச்செல்லை உடம்பு அழித்து வருகிறது. இதை அபாப்டோசிஸ் (Apoptosis) என அழைப்பர். செல் அழிந்து விடுவதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது.

4. அணுசக்தி துறையிலேயே மிகவும் முக்கியப் பிரச்சனை என்னவெனில் அதில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை எப்படி பாதுகாப்பது என்பதுதான். இதற்கான தொழில்நுட்பம் கூட இன்னமும் முழுமையாக கண்டறியப்படவில்லை. மேலும் கதிர்வீச்சின் பாதிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?

உதாரணமாக புளூட்டோனியம் 239ஐ எடுத்துக் கொள்வோம். இது தனது கதிர்வீச்சை பாதியாக குறைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் 24,000 வருடங்கள். அயோடின் 129ஐ எடுத்துக் கொள்வோம். 1990களிலேயே தாராபூர் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள கடல் தாவரங்களில் இதன் அளவு 740 மடங்கு அதிகம் இருந்தது அரசு விஞ்ஞானிகளாலேயே தெரியவந்தது. கல்பாக்கத்தில் என்னவெனில் கடல்வாழ் தாவரங்களில் இதை அளப்பதே இல்லை!

இந்த அயோடின் 129தனது கதிர்வீச்சைப் பாதியாக குறைக்க எடுத்துக் கொள்ளும் காலம் 17 மில்லியன் வருடங்கள் ஆகும். ஆக நாம் நமது சந்ததியினருக்கு இத்தகைய கொடூரமான அழிவுப் பொருட்களை விட்டுத்தான் செல்ல வேண்டுமா? நமது சந்ததியினர் வரும் காலத்தில் அக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டால் நமது மூதாதையர்கள் எத்தகைய பேரழிவை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர் என காறி உமிழமாட்டார்களா?

5. கதிர்வீச்சால் ஏற்படும் உடம்பு பாதிப்பு முற்றிலுமாகக் கண்டறியப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினால் அதற்குப் பதில் இல்லை என்றேதான் கூற முடியும். உதாரணமாக By Stander Effect. By Stander Effect என்றால் உடம்பில் கதிர்வீச்சுப் பாதையில் நேரடியாக படாத உறுப்புகளிலும் பாதிப்பு வருவதுதான். கதிர்வீச்சுப் பாதையிலுள்ள செல்களிலே ஏற்படும் வேதிமாற்றம் தூர உறுப்புகளின் செயல்பாட்டை பாதிப்பதால்தான் இது சாத்தியமாகிறது. இது சமீப காலத்தில்தான் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற புதிய கதிர் வீச்சு பாதிப்புகள் பின்னர் கண்டறியப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
George A Arul

No comments:

Post a Comment